நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, March 24, 2006

பாதுகாப்பு அடி

ம்மாதம் 18ஆம் தேதி, தமிழகத்தின் தொழில் நகரமான ஈரோட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் 'இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை நடத்தியது பற்றி நாளேடுகள் செய்திகளைத் தந்திருந்தன.

காலை உணவாகப் பொங்கல் கொடுக்கப் பட்டது, மதியம் சுக்குக் காப்பி கொடுக்கப் பட்டது, பஜ்ஜி சாப்பிட்டனர், ஏப்பம் விட்டனர் என்பது போன்ற அதி முக்கியமான தகவல்கள் ஒன்று கூட விடப்படாமல் தினமலர் விரிவான செய்திகளைத் தந்திருந்தது. தினமலர் கோபால், விஷ்வ ஹிந்து பரிஷத்தில் முக்கியப் பொறுப்பாளி என்பதால் தினமலரின் இச்சேவை வி.எச்.பிக்குத் தேவை. எனவே நாம் 'அதி முக்கியமான தகவல்களை'ப் பெரிதாகக் கண்டு கொள்ளத் தேவையில்லை.

சிவன் மட்டுமே கடவுள்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று வணங்கும் 'சைவ' மதமும் விஷ்னு மட்டுமே உயர்ந்த கடவுள்; மற்றது எதுவுமே கடவுள் இல்லை என்று கூறும் 'வைணவ'மும் சக்திதான் பெரிது; சக்தி இல்லையேல் சிவமே இல்லை; அவளே ஆதி என்று சக்தியை வணங்கும் 'சாக்த'மும், குமரனே (குமாரன் அல்லன்) கடவுள் எனப் பேசும் 'கெளமார'மும் கணபதிதான் ஆதி; அவனே மூலம் என்று அவனை வணங்கும் 'காணாபத்ய'மும் சூரியன் தான் கடவுள்; ஒளி இன்றேல் உலகமே இல்லை என்று சூரியனை வணங்கும் 'செளர'மும் 'ஷண்மதங்'களாக -ஆறுமதங்களாக- இத்தேசத்தில் இருந்தன.

அவற்றுக்கிடையே போட்டிகளும் யார் பெரியவர் என்ற வாதங்களும் நிறைய நடந்திருந்தன. கேரளத்தில், காலடியில் பிறந்த ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களையும் இணைத்து, 'இந்துமதம்' என்ற ஒன்றாக்கி, அதன் சேவைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் நான்கு மூலைகளில் நான்கு சங்கர மடங்களையும் நிறுவினார். வடக்கே காசி தெற்கே ஷ்ருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா என அவை நிலைகொண்டுள்ளன.

ஆதி சங்கரர் நிறுவிய மடங்களின் சேவையினால் 'இந்து மதம்' என்று பிற்காலத்தில் அறியப் பட்டுப் பின்பற்றப்படும் மதத்தில் ஆறு கடவுள்கள் போக அய்யப்பனும் ஏழாவது கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளான். அதனால் இந்து மதத்துக்கோ இந்து சமுதாயத்துக்கோ எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை. மேலும் இந்தியாவின் நிரந்தரப் பிரச்சனைப் பெயரான 'பாபர்' பெயரில் கூட (வாவர்சாமி) ஒரு சிறு தெய்வம் சபரிமலையில் குடிகொண்டுள்ளது. இதனாலும் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை. மாறாக சினிமா ஸூப்பர் ஸ்டார்களின் படையெடுப்பால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்கின்றது.

குன்றுதோறாடுவது குமரக் கடவுள் மட்டுமல்லன்; திருப்பதி மலை வாழும் வெங்கடேசனும் அய்யப்பனும் மலைக் கடவுள்களாகிவிட்டனர். அவ்வப்போது எழும்,'யார் பெரியவர்' என்ற சிறிய பிரச்சனைக்கு, "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில் மண்ணு" என்று தற்காலிகத் தீர்வு காணப்படும்.

ஏழு கடவுள்கள் போக ரஜ்னீஷ், சாய் பாபா, சிவசங்கர் பாபா, யாகவா முனிவர், பங்காரு அடிகள், மாதா அம்ருதானந்த மயி எனப் பல கடவுள்கள் தோன்றியும் இந்து மதத்துக்கு ஆபத்து நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை.

பின் யாரிடமிருந்து இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வி.இ.ப.வினர் மாநாடு கூட்டுகிறார்கள்?
மதமாற்றத்தைத் தடுத்து மதத்தைப் பாதுகாக்கப் போகிறார்களாம்.

இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.

பாலுக்கும் ரொட்டிக்கும் கோதுமைக்கும் பணத்துக்கும் மதம் மாறுகிறர்கள் என்று கூறுவது இந்துக்களை அவமதிப்பது போலாகும். ஏன் மதம் மாறுகின்றனர் என்று உண்மையான அக்கறையுடன் சிந்தித்தால் மட்டுமே உரிய விடை கிடைக்கும்.

ஒரு விபத்தில் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ வழி தெரியாது நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற 26 வயதுடைய மகேஸ்வரிக்குப் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் வேலை தரப்பட்டது.


இம்மாதம் [மார்ச் 2006] இரண்டாம் தேதி பணியில் சேர்ந்து சமைத்து வைத்தாள் மகேஸ்வரி. ஆனால் அப்பள்ளியின் 83 மாணவர்கள் உணவுண்ண வரவில்லை. மூன்று நாட்கள் அவள் சமைத்தது, உண்ணப் படாமல் கொட்டப்பட்டதுதான் மிச்சம். பெற்றோர்கள் மாணவர்களை உண்ண அனுமதிக்கவில்லை.

காரணம்:- மகேஸ்வரி ஒரு, 'தலித்' என்பதுதான்.

இவ்வாண்டு கோலாகலத்துடன் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. வீர மராட்டியர் வாழும் மாநிலத்தில் R.S.Sஇன் தலைமைச் செயலகம் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தின் நாஸிக் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மைதானத்தில், மராட்டிய அரசு உத்தரவுப்படி தேசீயக் கொடி ஏற்றச் சென்ற சுனிதா பாபு ராவ் கோடெராவ் என்ற பெண் பஞ்சாயத்து ஊழியை , பள்ளி முதல்வராலும் மற்றவர்களாலும் தடுத்து நிறுத்தப் பட்டாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவளைக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.

காரணம்:-
சுனிதா ஒரு,'தலித்'.

திண்ணியத்தில் மலம் திண்ண வைக்கப் பட்டான்.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

பாப்பாப் பட்டியிலும் கீரிப்பட்டியிலும் நாட்டார் மங்கலத்திலும் அவனுக்கு ஜனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமை மறுக்கப் படுகிறது.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அவன் கொடுமையாகக் கொல்லப் படுகிறான்.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

இன்றும் பற்பல ஊர்களில் அவனால் கடைக்குள் உட்கார்ந்து தேநீர் குடிக்க முடியவில்லை. வெளியில் நின்று குடிப்பதற்கும் தனிக் குவளை.

"நீங்களெல்லாம் சுத்தமில்லாதவா; உங்கத் தெருவுக்கெல்லாம் ஸ்வாமி வராது" என்று சங்கரச்சாரி சொல்வார்.

சரி, சாமி இருக்கிற தெருவுக்கு வந்து தேரை இழுப்போம் என்று போனால் அதற்கும் தடை.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.


இவர்களெல்லாம் சமுதாயத்தில் மானம், மரியாதையுடன் வாழ, மற்றவர்களைப்போல் மனிதனாக மதிக்கப்பட அடங்காத் தாகம் கொண்டு தேடிப் போகும் ஆறுதான் 'மதமாறு' என்பது.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.

இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.

எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்.

Friday, March 03, 2006

விளம்பர அடி

இது பொருளியல் காலம். பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்தையில் பொருள் விற்க வேண்டுமென்றால் விளம்பரம் வேண்டும். சந்தை நிலைத்து (மார்க்கட் ஸ்டெடியாக) இருப்பதற்குத் தொடர்ந்து 'அதிரடி' விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அது 'டல்'லாகிவிடும். விளம்பரம் என்பது தொடர் வண்டியை இழுத்துச் செல்லும் பொறிவண்டி(என்ஜின்) போன்றது. (புகை வண்டி என்ற சொல் மின் வண்டிகள் வந்த பின் பொருத்தமற்றதாகி விட்டது) வண்டி நிலையத்தில் சேர்ந்து விட்டதே என்று பொறிவண்டியை நிறுத்தி விட்டால் தொடர்வண்டி நின்ற இடத்திலேயேதான் நிற்கும்; நகராது.

பொறிவண்டி போன்றதே விளம்பரமும். பொறிவண்டி ஓடினால் மட்டுமே தொடர்வண்டி நகர்வது போல விளம்பரம் ஓடினால் மட்டுமே சந்தையில் பொருள் விலை போகும்.

விளம்பரத்திற்காகப் பலரும் பல உத்திகளைக் கையாள்வர். அவற்றிலொன்றுதான் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வது, தடை மற்றும் இழப்பீடு கோருவது போன்றவை.
தமிழ்த் திரைப்பட நடிகை குஷ்பு அண்மைக் கால 'மேக்ஸிம்' இதழிடமிருந்து 3 கோடி ரூபாய் இழப்பீடு கோருவதாக வெளியாகியுள்ள செய்தி, இவ்விளம்பர வகையைச் சார்ந்ததே என நம்புவதற்கு நிறைய இடமிருக்கிறது (தமிழுலகம் தம்மை மறந்துவிடக் கூடாது என்பதில் குஷ்பு மிக்க முனைப்புடன் உள்ளார்). மிகக் குறைந்த அளவிலான, உள்ளிருப்பவற்றை வெளிக்காட்டும் (Transparent) இரு துணித் துண்டுகள் அணிந்த(மேலே ஒரு கைக்குட்டை; கீழே ஒரு கைக்குட்டை) ஒரு பெண்ணின் புகைப் படத்தில் தம் தலையைப் பொருத்தி வெளியிட்டதால் தம் மானம் கப்பலேறி விட்டதாகவும் இழப்பீடு பெற்றுக் கொண்டால் அம்மானம் கரையிறங்கித் தம்மோடு ஒட்டிக் கொள்ளும் என்பதாகவும் கூறி அந்த ஆங்கில இதழ் மீது குஷ்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.


எத்தனையோ திரைப் படங்களில் இதே போன்ற உடை அணிந்து ஆடிக் காட்டியவர்தாம் குஷ்பு. ஆபாச அசைவுகளுடனும் அதைவிட ஆபாச வர்ணனைகளுடனும் கூடிய பாடல் காட்சிகளில் நடித்துக் 'கலைச் சேவை' செய்துள்ளதை குஷ்புவுக்குக் கோயில் கட்டிய தமிழ்ப் பக்த கோடிகள் மறந்திருக்க மாட்டார்கள். எனினும் குஷ்புவின் பக்தர்களல்லாதவர்க்கு நினைவூட்டச் சில. . . . .

ஒரு திரைப் படத்தில், குஷ்பு காய்-கனிச் சந்தையில் நடந்து வரும்போது அவரது 'மார் கட்டை' வர்ணிக்கும் கதாநயகன்,
" மாங்கா மாங்கா குண்டு மாங்கா
மார்க்கெட்டுப் போகாத ரண்டு மாங்கா. . . . "
என்று பாடி ஆடும் காட்சியில், ரசிகர்களைத் தூக்கமிழக்க வைத்தக் குஷ்புவின் 'மார்க் கட்டு' அசைவுகள்......

பருத்த, பெரிதான தேங்காய்களுக்குப் புகழ் பெற்றது வட இலங்கையின் யாழ்ப்பாணம். ஒரு திரைப் படத்தில் கதாநயகன்,
"ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரத் தேங்கா
இங்கே பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா "
என்று உயர்ந்த இலக்கிய நடையில் குஷ்புவின் முன்(சொன்ன) பகுதியை விளக்கிப் பாடி நடித்த காட்சியில் குஷ்பு இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கவில்லை; பாடலில் வர்ணித்த பகுதிகளைத் தாராளமாக 'மார்கெட்டிங்' செய்தே நடித்திருந்தார்.

குஷ்பு மட்டும்தாம் திரைப் படத்தில் மாங்கா, தேங்காயை மார்கெட்டிங் செய்தாரா? வேறு யாருமே செய்யவில்லையா? என்று குஷ்புவின் பக்தர்கள் வினவலாம்.
பழங்காலத் திரைப் படப் பாடல் காட்சியொன்றில் மாம்பழம் விற்கும் பெண்ணாய் நடித்த நடிகை,
" தொட்டுப் பார்த்துத்தான் தெரியணுமா
தோற்றத்தைப் பார்த்தா தெரியாதா
ஒட்டு மாங்கனி இனிக்குமுங்க
செக்கச் செவந்ததுங்க
சேலம் குண்டுங்க
அட வாங்க, இதை வாங்க "
என்று பாடிய போது இத்தனை ஆபாசமில்லைதான்.

இடைக்காலத்தில் ஒரு நடிகை,
"மாம்பழம் வாங்குங்கோ - இது மல்கோவாப் பழமுங்கோ
எல்லாம் வித்துப் போச்சுங்கோ இருப்பது ரண்டு தானுங்கோ
மல்கோவா அட மல்கோவா "
என்று பாடி ஆடிய போதும் குஷ்பு அளவுக்கு 'மார் கட்டிங்' செய்ததில்லை.

மற்றொரு திரைப் படத்தில், ஊடுருவும் (Transparent) மேலாடை அணிந்த கதாநாயகி நடிகையின் முந்தானையில் ஒளித்து வைத்திருந்த
மாங்காய்களைப்பறிக்க வந்த முதிய கதாநயகன்,
" பறிச்சாலும் துணி போட்டு மறச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ இளமாங்கா முன்னே "
என்று பாடிய போது அந்நாயகியும்

இன்னுமொரு திரைப் படத்தில் அதே நாயகன், .
" கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ" என்று கேட்டதற்கு,
"நானே தரும் காலம் வரும் ஏனிந்த அவசரமோ"
என்று விடையளித்த மற்றொரு நடிகையும் குஷ்பு அளவுக்குக் காட்டவில்லை

வேறொரு படத்தின் பாடல் காட்சியில்
"மாங்கனிகள் தொட்டிலிலே ஆடுவதேன் கண்ணே " என் வினவியவனுக்கு,
"மாலையிலே பறிமாற மன்னவனின் பசியாற"
என்று விடையளித்த நடிகையும் குஷ்பு அளவுக்குக் காட்டவில்லை

" தேங்காயிலே பாலிருக்கும்
அதை வாயாரக் குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும்தான் மேலிருக்கும்
அது கைத் தொழில் வேலைக்குக் கை கொடுக்கும்
எளசானாத் தண்ணியிருக்கும்
முத்திப் போனா என்னயிருக்கும்
உப்புக் கரிக்கும் மக்குப் பயலே சப்புண்ணிருக்கும் "
என்று 'ஏழு வயசிலே எளனி ( தேங்காய்) வித்த' நடிகையும் இந்த அளவுக்குத் 'துணிய(விழ்க்க)'வில்லை.

'மேக்ஸிம்' என்பது ஆங்கில மொழியில் வெளி வரும் இதழாகும். புதிதாக இந்தியாவில் அறிமுகமாகித் தடம் பதிக்க முயலும் இதழாகுமது. இந்தியாவில் ஆங்கிலச் செய்தித் தாள்களையே மேல் தட்டு மக்கள்தாம் படிப்பர். இந்நிலையில் மேக்ஸிம் போன்ற ஆண்களுக்கான இதழை எத்தனைபேர் படித்து விடுவர்? விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலானோர் படிக்கும் இதழில் வெளிவந்த படத்தால் (அதுவும் அப்படம் 100% போலி என்று அப்படத்தின்கீழ் அடிக் குறிப்பு உள்ளதாகச் செய்தி) மானம் போய் விட்டதாகக் கொதிக்கும் / குதிக்கும் குஷ்பு, படிப்பறியாப் பாமரர் முதல் பள்ளிச் சிறுவர் உட்பட அனைத்து நிலை மக்களும் பார்த்து மகிழும் திரைப் படத்தில் அவரால் காட்டப் பட்ட ஆபாச அசைவுகளுக்கு எந்த நீதி மன்றத்துக்குப் போனார்? இன்றளவும் வீடுகளின் வரவேற்பறைகளில் தொலைக் காட்சி வழியாக குஷ்புவின் 'சந்தைப் பரிமானம்' கொடிகட்டிப் பறப்பது தொடர்கிறதே?
இந்தியாவில் - குறிப்பாக வட நாட்டில் - குஷ்புவை விட அழகிலும் இளமையிலும் வளமையாகவும் செழுமையாகவும் திகழ்கின்ற எத்தனையோ நடிகையர் இருக்கும்போது, குஷ்புவின் தலையை எதற்காக அந்த இதழ் ஒட்டி வெளியிட வேண்டும்?

ஏனெனில் வேறெந்த நடிகையரும் தமக்கில்லாத கற்பைப் பற்றிப் பெருமையாக குஷ்பு அளவுக்குப் பேட்டியளித்ததில்லை.அந்தப் பேட்டி காரணமாய் அனைத்திந்திய அளவில் குஷ்பு பெற்றிருந்த புகழை அவ்விதழ் , 'முதலீடாக்க' முனைந்தது. அதன் ஒப்பந்தமே அவ்வொட்டுப் படம்.

குஷ்புவின் வழக்கு 'விளம்பர உத்தி'யேயன்றி வேறில்லை. 'மார்க் கட்டு'ப் போய்விட்ட நடிகை குஷ்புவுக்கும் விளம்பரம்; புதிதாக மார்க்கெட்டில் புகுகின்ற மேக்ஸிம் இதழுக்கும் விளம்பரம். "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" . ( குஷ்பு 'மேட்டர்' என்றாலே மாங்காய் தனாகவே பழுத்து விடுகிறது) இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இது பற்றிய செய்திகளைத் தந்து, தம் ஜனநாயகக்(?) கடமையை நிறைவேற்றி விட்டன.

இனி, "நீதி மன்றத்துக்கு வெளியே உடன்பாடு" என்று 'இழப்பீடு நாடக'த்தின் அடுத்த காட்சி தொடரும் என்று எதிபார்க்கலாம்.

அடுத்த அடிக்குப் பொறுத்திருப்போம்.

........................................... மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!