நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, February 15, 2008

தொடரும் அடி

அடி அதிரடி தொடரும்.

சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் வருவதில்

அதிரடிப்படை மகிழ்கிறது.

Saturday, January 13, 2007

உழவனுக்கு அடி

உழவர் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

Thursday, December 21, 2006

பாகிஸ்தானுக்கு அடி

'பாகிஸ்தானாகி வரும் தஞ்சைத் தமிழ் மண்' எனும் தலைப்பில் ஜடாயுவின் கட்டுரை ஒன்று தமிழ் மணத்தில் வெளிவந்துள்ளது:

"பல ஊர்களில் மாடவீதி, ரதவீதிகளில் எல்லாம் பல முஸ்லீம் வீடுகள் வந்துவிட்டன. எந்த விலை கொடுத்தும் நிலம், வீடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள்" எனத் துவங்கும் ஜடாயு, மலர் மன்னன் தின்றும் செரிக்காததை ஜட வாயுவாக வெளிப்படுத்தியுள்ளார் .

"தஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது"

முஸ்லிம்கள் என்று அழைக்கப்படும் ஒரு சமயத்தாரை இணைய இந்துத்துவாக்கள் பல கூறுகள் போட்டு வகைப்படுத்தி எழுதத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக 'வகாபி' என்றொரு புதுப் பிரிவைத் தாமே உண்டாக்கி, அவர்களை உலகமகாத் தீவிரவாதிகள் போல் சித்திரித்து எழுதி வருகின்றனர். தமக்குத் தேவைப் படும்போது தலித்துக்களையும் இந்துக்கள் எண்ணிக்கையில் சேர்ப்பது; தேவைப்படாத போது அவர்களைத் தனிமைப்படுத்துவது எனும் உத்தியை முஸ்லிம்கள் விஷயத்திலும் இந்துத்துவாக்கள் தந்திரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

"தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்தவில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்" என்பது ம.ம.வின் அச்சம்.

தஞ்சையும் கும்பகோணமும் பார்ப்பனர்களின் பரம்பரைச் சொத்தா? இணையத்தில் வலைப்பூ கோர்க்கும் நண்பர் ஒருவரின் பதிவொன்றில் அனானியாகப் பின்னூட்டிய ஓர் இந்துத்துவா சொன்னது:-
"இன்றும் கூட உலகமெல்லாம் இஸ்ரேலுடைய அவர்கள் விலை கொடுத்து வாங்கிய நில பாதுகாப்பு போராட்டத்தை தவறாக வரலாறு சொல்லிக் கொடுப்பவர்தானே நீங்கள்?"

இங்கே கும்பகோணத்திலும் தஞ்சையிலும் முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டவோ பள்ளிவாயில் கட்டவோ கூடாது எனக் கூறும் ம.ம.விடமும் ஜடாயுவிடமும் . . அனானியாகப் பின்னூட்டிய இந்துத்துவா இதைக் கூற வேண்டியது தானே?

இஸ்ரேல் விலை ? கொடுத்து வாங்கிய ? ! நிலமான பாலஸ்தீன பூமியில் இஸ்ரேல் படை, குழந்தைகள் உட்பட ஆயிரக் கணக்கில் பாலஸ்தீனர்களைக் குறவர்கள் குருவி சுடுவதுபோல் சுட்டுப் படுகொலை செய்யலாமாம்; அதைச் சுட்டிக் காட்டுவது தவறான வரலாறாம்.

ஆனால் தாம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் வீடு கட்டவோ பள்ளிவாயில் கட்டவோ கூடாது எனக் கூறுவது சரியான வரலாறாம்.

சமணத்தையும் பவுத்தத்தையும்போல் இஸ்லாமை இவர்களால் அழிக்க முடியவில்லை என்பதாலேயே "தஞ்சையில் பள்ளிவாயில்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது" போன்ற வெறிகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்தியாவின் முஸ்லிம்களின் வரலாற்றுத் தொடர்புடைய, அவர்களுக்கு உரிமையான பாபரி மசூதியை உடைத்தனர். (இன்னும் மூவாயிரம் மசூதிகளைக் குறி வைத்துள்ளதாகக் கூறி முஸ்லிம்களிடையே பீதியைப் பரப்பி வருகின்றனர்).

சென்னை தி.நகரில் பள்ளிவாயில் கட்ட வாங்கப் பட்ட நிலத்தில் திடீர்ப் பிள்ளையாரை முளைக்கச் செய்து தமிழ் நாட்டையே நகைக்கச் செய்தனர். ஆனால் அன்று தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கருணாநிதி இருந்ததால் பள்ளிவாயில் முஸ்லிம்களுக்கே கிடைத்தது. பிள்ளையாரின் மூலத்தைக் கண்டுபிடித்து, பிள்ளையாரைக் கிணற்றிலிருந்து முளைக்கச் செய்த தலைமைக் காவலரையும் கண்டுபிடித்தார் கருணாநிதி.

"அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இளைஞர்களில் பெரும்பலோர் தஞ்சை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலிருந்து வருகின்றனர். அந்த பணப்பலத்தால் கிராமத்திலிருந்து தஞ்சை நகருக்கு மாறி வருகின்றனர் என்பது என் கருத்து." என வலைப் பதிவர் கால்கரி சிவா பின்னூட்டத்தில் கூறியுள்ளது சரியான கணிப்பு.

அன்னிய நாடான அமெரிக்காவில் போய்க் குடியேறிய அம்பிகளெல்லாம் 'Green card' வாங்கி, Flats சொந்தமாக்கலாம்; பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் கட்டலாம்; அதற்கு மணியாட்ட இங்கிருந்து குருக்களும் பட்டாச்சாரிகளும் செல்லலாம். ஆனால் தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டக் கிராமப் புறத்தவர் தஞ்சை நகருக்கும் கும்பகோணத்துக்கும் வந்து குடியேறக் கூடாதாம்.

தஞ்சையும் கும்பகோணமும் காஷ்மீரோ வடகிழக்கு மாநிலங்களோ அல்ல - பிறர் விலை கொடுத்து நிலம் வாங்க முடியாது என்று சொல்ல. அதைச் சொல்லும் அதிகாரமும் இவர்களுக்கு இல்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் அரசியல் மற்றும் படை பலத்தால் இந்தியாவுடன் இணைக்கப் பட்டவை. அதனால்தான் அம்மாநிலத்தவருக்குச் சில சலுகைகளை அரசே கொடுத்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தியா ஒரே நாடு எனப் பேருந்துகளிலும் பாட நூல்களிலும் பொறித்து வைத்துவிட்டுக் கிராமப் புறத்தவரை நகர்ப் பகுதிக்குள் விடமாட்டோம் என்று சொல்வது ஃபாஸிஸமல்லவா?

சமயங்கள் இச்சமூகத்திற்குத் தேவையா, அவற்றால் விளைவன நன்மையா தீமையா என்ற வாதங்கள் ஒருபுறமிருக்க, ஒரு வேற்றுச் சமயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதற்காக அவர்களது உரிமையையும் இருப்பையும் கேள்விக்குறியாக்குவது எவ்வகையில் நியாயம்?

"ஒரு 20 வருடம் முன்பு கூட இந்தக் கருப்பு பர்தா போட்ட பெண்களை இவ்வளவு பார்க்க முடியாது. ஒரு வெள்ளைத் துணியை சம்பிரதாயமாக முகத்தில் சுற்றியிருப்பார்கள், அவ்வளவு தான்.. ஆனால் இப்போது தெருவுக்குத் தெரு இப்படிப் பர்தா அணிந்து கஷ்டப் பட்டு வெயிலில் நடந்து போகும் பெண்களைப் பார்க்கலாம்..." என்று ஜடாயுவிடம் ம.ம. கூறினாராம்.

முஸ்லிம் பெண்கள் அவர்களின் சமய நம்பிக்கைப்படி அல்லது சுய விருப்பில் கருப்பு பர்தா அணிகின்றனர். அதைக் குறை கூற இந்த ம.ம.வுக்கு என்ன உரிமை உள்ளது?

கருப்பு பர்தா அணிவதால் தஞ்சை மண் பாகிஸ்தானாகி விட்டதாகப் புலம்பும் மாமா!

பஞ்சக்கச்சம் என்ற பெயரில் ஒரு அரைக்கால் கோவணத்தைக் கட்டிக் கொண்டு, திறந்த மார்பில் ஓர் அழுக்குப் பூணூலையும் (cross belt) போட்டுப் பெண்கள்போல் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு செல்லும் எந்தப் பார்ப்பனரையாவது முஸ்லிகள் குறை சொன்னதுண்டா?

மாமி ஆத்திலேர்ந்து மடிசார் கட்டிண்டு குலுங்கக் குலுங்க நடந்து போறச்சே யாராச்சும் குத்தம் சொல்றாளா மாமா?

அனுபவிக்கும் போகப் பொருளாகப் பெண்ணைக் கருதி, அவளின் 'அங்க லாவண்யங்களை' க் கண்டு ரசிக்க வடிவமைக்கப் பட்ட உடைதானே மடிசார்.
பருத்த பின்புறம், கனத்த முலை, வழவழ இடுப்பு, கடைந்தெடுத்த கெண்டைக்கால் இவற்றைக் கன பரிமானங்களோடு காட்டுவதல்லவா மடிசார்?

'புதுக்குரல்கள்' என்ற எழுபதுகளின் கவிதைத் தொகுப்பு ஒன்றில், கம்பனின் வரிகளைக் கோர்த்திணைத்துக் கவிஞர் சி.மணி, ஒரு புதுக் கவிதை புனைந்திருந்தார். அதில் பேருந்துக் காட்சி ஒன்று......
"சூடகத் தளிர்க்கை மாதரோடு
சிகரெட் பிடி கை மைந்தரும்
ஊடுற நெருக்கி ஏற
சேவலே முன்னென்போரும்
பெட்டையே முன்னென்போரும்
வரிசையே நன்றென்போரும்
தேர்ந்ததைத் தேறினல்லால்
யாவரே தெரியக் கண்டார்
......................
...............
சரிந்த தலைப்பால் தெரிந்த பூவுள
அவை பாலூட்டக்
கிடைத்தனவோ
பால் உணர்ச்சி ஊட்டிடவே
ஆழக் கழுத்தெடுத்து
நீளம் மிகக்
குறைத்து
சேரப் பிடித்த சோளி....
............................................."

என்று போகும் கவிதையைப் படித்தவுடன் மடிசார் மாமியின் முழு உருவே நினைவில் மேலெழும்.

புதுக் கவிதை உலகின் துவக்க காலக் கவிதைகளில் பரவலாகப் பேசப் பட்ட ஒன்று,(கல்யண்ஜி என நினைவு)
"கருப்பு வளையல் அணிந்த
வேலைக்காரி
குனிந்து நிமிர்ந்து பெருக்கிப் போனாள்;
வாசல் சுத்தமாச்சு-
மனசு குப்பையாச்சு"

இது ஆணின் மனப் போக்கைக் காட்டும் கவிதை.

"தள்ளாடும் கிழவன் கண்ணும் தடுமாறும் அங்கே
தவம் செய்யும் முனிவன் கண்ணும் அலைபாயும் அங்கே!"

எனவே,

"ஈர்க்கிடை போகலாகா எதிரெதிர் பணைத்து விம்மும்
வார்க்குலமறுத்த கொம்மை வரிமுலை"யை வக்கணையாய்க் காட்டும் உடைகளைக் கைவிட்டு இன்றைய தமிழ்ப்பெண் தன் முழு உடலையும் மறைக்கும் 'சுடிதார்' எனும் உடைக்குள் வலம் வருகிறாள். அவளின் பணிக்கும் போக்குவரவிற்கும் இருசக்கர வாகனம் ஓட்டுதற்கும் ஓடிப்போய்ப் பேருந்தில் ஏறுதற்கும் இந்தச் சுடிதார் மிகவும் வசதியாய் உள்ளதாகக் கூறுகிறாள் என் தமிழ்க் குலப்பெண். அந்தச் சுடிதார் உடை பாகிஸ்தானின் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவான தேசீய உடை என்பது மாமாவிற்கோ ஜல்லியடிக்கும் ஜடாயுவிற்கோ தெரியாதா? அந்தச் சுடிதார் உடை அணிவதால் தமிழ்நாடே பாகிஸ்தானாகி விட்டது என்று ஒரு பதிவு போடக்கூடாதா?

"Women wearing 'pardha' is their religious belief, just like a Hindu women wearing 'pottu' and piercing nose and ears for mookkuththi and kammal" என்று BadNewsIndia சொல்லியுள்ளது சரியே.

ஒரு எட்டு /பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டு சுமங்கலிப் பெண்கள் நெற்றியில்தான் குங்குமம் வைப்பர். இப்போது வடநாட்டுக் கலாச்சாரத் தாக்கத்தால் தமிழகத்துப் பெண்களில் உயர் தட்டில் உள்ள ஒரு பிரிவினர் உச்சி வகிட்டிலும் குங்குமம் தீட்டுகின்றனர். அது அவர்களின் விருப்பமும் சுதந்திரமும் ஆகும். குங்குமம் சற்றே மேலேறி விட்ட காரணத்தால் தமிழ்நாடு வடநாடாகி விட்டது எனத் தமிழ் இயக்கத்தார் எவராவது பதிவிட்டுள்ளனரா?

"எந்த அளவிற்கு தீவிரவாத இஸ்லாம் ஒரு இடத்தில் பரவி வருகிறது என்பதற்கு கருப்பு "பர்தா" ஒரு அளவு கோல் என்று தோன்றுகிறது." இது ஜடாயு பின்னூட்டியது.

காக்கி அரைக்கால் சட்டையிட்டுக் கம்பு, தடியுடன் தெருக்களில் வலம் வரும் இந்துத்துவாவை விடவா முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு உடை தீவிரவாதம்?

துர்க்கா வாஹினி என்ற பெயரில் துப்பாகியால் சுடும் பயிற்சி பெறும் இந்துப் பெண்களை விடவா கறுப்புடை அணியும் முஸ்லிம் பெண்கள் தீவிரவாதிகளாகின்றனர்?

கிருத்துவசமய அருட்சகோதரிகள் அணியும் உடையும் முஸ்லிம் பெண்களின் கறுப்பு உடை போன்றதே! அந்த அருட்சகோதரிகளை எப்போது தீவிரவாதிகளாக்கப் போகிறீர்கள் மாமா?

வடநாட்டு மார்வாடிகள் வடதமிழகத்தில் - குறிப்பாகச் செங்கல்பட்டு, திண்டிவனம் பகுதிகளில் அடர்த்தியாகக் குடியேறி நகராட்சித் தலைவர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பதவிகள் பெற்று வாழ முடிகிறது; குஜராத்தின் செளராஷ்டிரப் பகுதியில் இருந்து தமிழகத்தில் குடியேறி வாழும் செளராஷ்டிரர்கள் நகராட்சித் தலைவர், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எனப் பதவிகள் பெற்று வாழ முடிகிறது; அவர்களின் தாய் மொழியில் பேசி, அதை வாழ வைத்து அவர்கள் தமிழ்நாட்டில் சகல உரிமைகளுடன் சுகமாக வாழ முடிகிறது.

ஆனால் தமிழ் வழங்கும் தஞ்சையின் தமிழ் பேசும் முஸ்லிம் கிராமத்தார் தஞ்சை நகருக்குள் வாழக் கூடாது; அது ஆபத்து எனப் பதிவிடுவதும் அதற்குப் பின்னூட்டி ஜல்லியடிப்பதும் இந்துத்துவாவின் தாக்கம் இணைய உலகில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளது என்பதற்குச் சான்றுகளாகும்.

மேற்காண்பவை ம.ம.வோ ஜடாயுவோ சுயமாகச் சிந்தித்து எழுதியவை அல்ல. மாறாக, இந்துத்துவாவின் திட்டமிட்ட செயலாகும் இது என்பது, ஜனநாயகன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் வாயிலாகத் தெளிவாகிறது: அமைதிப் பூங்காவான தமிழகத்தை அமளிக் காடாக்கத் திட்டமிடும் இணைய அறிவு ஜீவி(?)களை அடையாளம் கண்டு புறக்கணிப்பது அமைதி விரும்பும் தமிழர்களின் கடமையாகும்.

Thursday, July 27, 2006

நாடக அடி

நாட்டுப் பற்று என்பது தங்களின் ஒட்டு மொத்தக் குத்தகைச் சரக்கு என்று 'பம்மாத்து'ப் பண்ணிக் கொண்டிருக்கும் சங் பரிவார் பீ.ஜே.பீ கும்பலின் மற்றொரு நாடகம் இவ்வாரம் அரங்கேறியது.

பீ.ஜே.பீ அரசில் அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் ஸிங் எழுதியுள்ள நூலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கருத்து உண்மையாகவே நாட்டுப் ப்ற்றறுள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! நரசிம்மராவ் பிரதமராக இந்நாட்டை ஆண்டபோது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஓர் உயர்நிலை அலுவலர் இந்தியாவின் அணு ஆயுத இரகசியங்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தார்; அது பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் ஸிங் தம் நூலில் கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளிக்க ஊடகத்தினரைச் சந்தித்தபோது, அமெரிக்காவின் உளவாளியாகச் செயல் பட்ட அந்த உயர்நிலை அலுவலரின் பெயரைச் சொல்ல மறுத்து விட்டார். பிரதமர் மன்மோஹன் ஸிங்கிடம் மட்டுமே அவர் பெயரைத் தெரிவிப்பேன் என்றும் பூசி மெழுகியுள்ளார்.

இது குறித்துக் கருத்துச் சொல்லவோ அல்லது உண்மையை உரைக்கவோ நரசிம்ம ராவ் இன்று நம்மிடையே இல்லை என்பது ஜஸ்வந்த் ஸிங்கின் முதல் தைரியம். அவர் குறிப்பிடும் அந்த முன்னாள் உயர்நிலை அலுவலரும் இந்தியாவிலேயே இல்லை என்று அவரே கூறிவிட்டார். இது ஜஸ்வந்த் ஸிங்கின் இரண்டாவது தைரியம்.

இந்நிலையில் இவர் தம் நூலில் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ஊடகத்தினர் பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். "பத்தாண்டுகளுக்கு முன்பே அமெரிக்க உளவாளி பற்றித் தெரிந்திருந்தும் நீங்கள் ஆண்ட காலத்தில் ஏன் அவ்வுளவாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" என்ற வினாவுக்கு,"அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்த இரகசியங்கள் தலையாயவை அல்ல" என்று விடையிறுத்துள்ளார்.

அத்தனை முதன்மை வாய்ந்த இரகசியம் இல்லை என்றால் இப்போது- பத்தாண்டுகளுக்குப் பின்- அதைப் பற்றி எழுதி வீணான ஒரு பரபரப்பை உருவாக்கியது ஏன்?

உளவு சொன்ன உயர்நிலை அதிகாரியின் பெயரைப் பிரதமரிடம் மட்டும்தான் தெரிவிப்பாராம். இது என்ன ஆரியக் கூத்தா?

நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு குற்றம் பற்றிய செய்தியைப் பொத்தாம் பொதுவாக ஒரு நூலில் குறிப்பிடுவாராம்; அது பற்றி மேல் வினா வரும்போது பிரதமரிடம் மட்டும் சொல்வேன் என்பாராம். இது மன்மோஹன் ஸிங்கின் வீட்டு அடுக்களையில் தேங்காய் மூடி திருடிய செயலில்லை- அவரிடம் மட்டும் சொல்வதற்கு. நாட்டு அணு ஆயுத இரகசியத்தைத் திருடிய செயல். அது பற்றி அறியும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதை மறைக்கும் உரிமை ஜஸ்வந்துக்கு இல்லை.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின் அதன் இராணுவம் மற்றும் ஆயுத இரகசியங்களை எதிரிகளுக்கு விற்றவர்கள் என்று பிடிபட்டவர்களில் மிகவும் பேர் பெற்றவர்கள் நாராயணன், சங்கரன், கோபாலன் ஆகியோரே. இவர்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய உயர்நிலை அலுவலர்கள் ஆவர். நாட்டுப் பற்று எமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் உயர் சாதியினர்.(இவர்கள்தான் இது போன்ற அரசுத் துறைகளில் உயநிலைப் பதவியில் வரமுடியும்) சிறுபான்மையினரோ அல்லது இந்து சமய சாதி அடுக்கில் கீழ் நிலையில் உள்ளவர்களோ இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகாரில்லை.

இப்போது ஜஸ்வந்த் மூடி மறைக்கப் பார்க்கும் பெயரும் இத்தகையதுதானோ?

வெளி உளவுத்துறை (R A W) யில் உயர் நிலை அலுவலராக (D I G )ப் பணியாற்றிய உண்ணி க்ருஷ்ணன் என்பவர் அமெரிக்காவின் உளவாளியாகவும் செயல்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டுப் பதவி நீக்கம் செய்யப் பட்டார். டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப் பட்டார்.அது போல இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவ்வுளவாளி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காது விட்டுவிட்டு - அவர் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதித்து விட்டு - இப்போது அதைப் பற்றிக் கூறுவது பரபரப்பு நாடகமே அன்றி வேறில்லை.

பிரதமராகப் பதவி வகித்த வாஜ்பேயும் துணைப் பிரதமராயிருந்த ஆட்வாணியும் ஊடகங்களால் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப் பட்டிருக்கும் இக்காலச் சூழலில் தாங்கள் இருப்பதை மக்களுக்கு நினைவூட்ட ஏதாவது செய்ய வேண்டியது பீ.ஜே.பீயினருக்கு இப்போது கட்டாயமாய் ஆகிப் போனது. ரத யாத்திரை நடத்துவது, அவ்வப்போது அயோத்திப் பிரச்சனையைக் கிளப்புவது, அல்லது கட்சியின் உயர்நிலைத் தலைவர்களைக் களையெடுப்பது எனச் செய்து அலுத்தபின் இப்போது நூல் எழுதிப் பரபரப்பு நாடகம் நடத்துகின்றனர்.

காதாசிரியர் ஜஸ்வந்த் ஸிங்கின் இந்தத் தோல்வி நாடகத்தை அதிக நாட்கள் ஓட்ட முடியாது என்பதால், வில்லன் மதன்லால் குரானா இணைந்து வழங்கும் அடுத்த நாடகத்தை விரைவில் எதிர் பார்ப்போமாக!

Friday, June 30, 2006

ஆறால் அடித்த அடி...

ஆறு அடி போடும் படி அசுரன் போர்ப் பறை கொட்டி அழைத்ததால் நான் போட்ட ஆறு அடி :-

எனக்குப் பிடித்த உலகத் தலைவர்களுள் அறுவர்
1. அன்னை இந்திரா காந்தி (அரசியல் தொலை நோக்குடன் பங்களா தேசத்தை உருவாக்கியதில்)
2. ஆபிரஹாம் லிங்கன் (அமெரிக்க அடிமை ஒழிப்பில்)
3. மிகாயீல் கார்ப்பசேவ் (நிறைய சுதந்திர நாடுகள் தோன்றியதற்கு)
4. ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவின் உறக்கத்தைக் கெடுப்பதால்)
5. மஹ்மூத் அஹ்மதி நெஜாத் (அமெரிக்காவை எச்சரிப்பதால்)
6. நெல்சன் மண்டேலா ( தென்னாப்பிரிக்க விடுதலையில்)

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் அறுவர்
1. தேவன்
2. தி.ஜானகிராமன்
3. லா.ச.ராமாமிருதம்
4. கி.ராஜநாராயணன்.
5. ஜெயகாந்தன்
6. தோப்பில் முஹம்மது மீரான்

எனக்குப் பிடித்த திரைப் படங்களுள் ஆறு
1. தேவதாஸ்
2. தியாகம்
3. நவராத்திரி
4. நான் ஏன் பிறந்தேன்
5. அவள் அப்படித்தான்
6. ஆறிலிருந்து அறுபதுவரை

எனக்குப் பிடித்த கவிஞர்களுள் அறுவர்
1. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2. கவியரசு கண்ணதாசன்
3. மீரா
4. நா.காமராசன்
5 மு.மேத்தா
6. நீலமணி

மறக்க முடியா நாவல்/ புதினங்களுள் ஆறு
1. கல்கியின் சிவகாமியின் சபதம்
2. தேவனின் துப்பறியும் சாம்பு
3. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள்
4. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள்
5. மு.மேத்தாவின் சோழநிலா
6. தோப்பிலின் ஒரு கடலோர கிராமத்தின் கதை

எனக்குப் பிடித்த ஊர்களுள் ஆறு
1. நான் பிறந்த மண்
2. உதகமண்டலம்
3. பெங்களூர்
4. திருவனந்தபுரம்
5. ஆம்பூர்
6. குற்றாலம்

நான் காணவிரும்பும் நாடுகளுள் ஆறு
1. ஸ்விட்சர்லாந்து
2. ஜப்பான்
3. ஜெர்மனி
4. ப்ரான்ஸ்
5. சிங்கப்பூர்
6. இத்தாலி

எனக்குப் பிடித்த உணவு வகைகளுள் ஆறு
காலைச் சிற்றுண்டிககு
1. முதல் நாள் இரவில் மண்சட்டியில் சமைத்து வைத்த சுறாமீன் குட்டியை
மறுநாள் காலை அரிசிமாவில் செய்த உரொட்டியுடன் உண்டு கறுப்புத் தேநீர் பருகுவது (கிடைப்பது வெகு அரிது!)

2. இடியப்பமும் ஆட்டிறைச்சியும்

3. அப்பமும் உருளைக் கிழங்கும்

4. பழைய சோறும் கட்டித் தயிரும் நெல்லிக்காய்த் தொகையலும்

நண்பகல்
5. வெண் சோற்றில் தேங்காய்ப் பால்க் குழம்பும் புளித் தொகையலும் சேர்த்து, பொரித்த குதிப்பு மீன் கருவாட்டுடன் உண்ணும் உணவு..( நெஞ்சு வரை சோறு ஏறும்... இப்போதெல்லம் அருகி விட்டது)

இரவில்
6. அரிசிமா உரொட்டியுடன் கோழி இறைச்சி

(சப்பாத்தி, பூரி, பரோட்டா பிரியானி போன்ற முகலாய / வட இந்திய உணவுகள் பஞ்சத்துக்கு மட்டும்...)

ஆறில் வலை வீச நான் அழைக்கும் வலைஞர்களில் அறுவர்
1. குழலி
2. பன் பட்டர் ஜாம்
3. நாமக்கல் சிபி
4. தி.ராஸ்கோலு
5. பகுத்தறிவாளன்
6. போலி டோண்டு :-)

குறிப்பு;-
போலி டோண்டுவின் ரசிகர் மன்றத்திற்கு விண்ணப்ப அடி போட்டேன். அது வ(ப)லித்ததா இல்லையா எனத் தெரியவில்லை

Friday, June 16, 2006

அதிகாரப் போதை அடி

ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்துப் பழ.நெடுமாறன் நடத்தும் போராட்டங்களில் 'அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது' என பா.ம.க. நிறுவனர் தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ஐயா தெரிவித்துள்ளார்.

என்ன அரசியல் காரணங்கள்?

தம்முடன் கூட்டணியில் இருந்து தற்போது அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்ட வையாபுரி.கோபாலசாமியும் தொல். திருமாவளவனும் கலந்து கொள்ளும் போராட்டத்தில் தமது கட்சியும் பங்கேற்பது தற்போதைய கூட்டணிக்கு ஒவ்வாது என்பது போன்ற அரசியல் காரணங்களால் பா.ம.க. கலந்து கொள்ளாது என்று தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் ராமதாஸ் கருதியிருப்பாரெனில் அது முற்றிலும் தவறு.

ஏனெனில் தமிழகத்துப் பொறுக்கி அரசியல் (ஓட்டுப் பொறுக்குவதைக் கூறுகிறேன்) காரணங்கள் உலகத் தமிழினத்துக்குச் சிக்கல் வரும்போது செல்லுபடியாகாது. ஒரு பொதுவான நோக்கத்திற்காக - இன்னல் படும் ஈழத் தமிழருக்காக - அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப் படும் போராட்டத்தில் அற்ப, கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டிக் கலந்து கொள்ளாது தவிர்ப்பது என்பது சரியான அணுகுமுறை ஆகாது.

மும்பை (முன்னாள் பம்பா)யில் பிழைக்கச் சென்ற தமிழர்களைத் தாக்கித் துரத்தியடிப்பதற்கென்றே சிவசேனை என்ற பயங்கர குண்டர் படையை நடத்தி வந்தார் பால்தாக்கரே என்ற மராட்டிய பார்ப்பன வெறியர். பின்னர் அவர் இந்துமத வெறியராகி முஸ்லிகளைத் துரத்த வேண்டும் என்றார். (பம்பாய்க் கலவரத்தில் ஆண் குறியைப் பார்த்து அடையாளம் கண்டு, ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைச் சிவசேனையினர் கொன்றொழித்தது தனிக்கதை) அப்படிப் பட்ட தமிழர் விரோத பால்தாக்கரேயைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து ஈழத் தமிழருக்கான ஆதரவு மாநாடு நடத்தியவர்தாம் தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ராமதாஸ் ஐயா. தமிழர் என்று சொன்னால் பால்தாக்கரே வரமாட்டார் என்பதால் அவருக்குப் பிடித்த "இந்து" என்ற இனிப்பு மிட்டாயைக் கொடுத்து, "இலங்கையில் துன்பப் படும் இந்துத் தமிழர்களைக் காக்க" என்று அந்த மாநாட்டை நடத்தினார். இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழர் எதிரியான பால்தாக்கரேயையே அழைத்து மாநாடு போட்டவர், கேவலம் கூட்டணிப் பிளவுகளைக் காரணம் காட்டி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்திருப்பாரா?

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது "பெற்ற தாயைப் புணர்வதற்குச் சமம் ; அத்தவறை நான் மீண்டும் செய்யவே மாட்டேன்" என்று வீர ஆவேச உறுதிமொழி எடுத்துத் தமிழகத்தின் செய்தி ஊடகங்களில் நிறைந்து நின்ற ராமதாஸ், குறுகிய காலத்தில் மீண்டும் ஒருமுறை அத்தவறைச் செய்தார். அதற்கே வெட்கப் படவோ தயங்கவோ செய்யாதவர், தமிழ்க்குடிதாங்கி ஆன பின் வைகோவும் திருமாவும் கலந்து கொள்ளும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வெட்கப் பட்டுப் போராட்டத்தைப் புறக்கணிப்பாரா? நிச்சயமாக இக்காரணத்தால் புறக்கணிக்க மாட்டார்.

பின் வேறென்ன அரசியல் காரணங்கள்?

"நானோ என் குடும்பத்தவரோ அரசியலால் எதிகாலத்தில் எந்தப் பதவியும் பெற மாட்டோம்" என்று தமிழகத்து மக்களுக்கு உறுதிமொழி அளித்து, மேலே சொன்னபடி வழக்கம்போல் உறுதிமொழி(யில்தடு)மாறித் தம் மகன் அன்புமணிக்கு மத்திய அரசில் மந்திரிப் பதவி வாங்கிக் கொடுத்தவர்தாம் மருத்துவர் ஐயா.

இப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தம் மகனின் பதவிக்குப் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற பதைப்பு(அரசியல்)காரணங்களால் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தமிழ்க்குடிதாங்கித் தம்குடிதாங்கியாகிவிட்டார். இனி கா(ஆ)ட்சிகள் மாறும்போது அடுத்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தைத் தமிழ்க்குடிதாங்கியே முன்னின்று நடத்துவார் என்றும் அப்போராட்டத்திற்குத் திரிசூலத்துடன் பிரவீன் தொகாடியாவையோ நரேந்திர மோடியையோ அழைக்கவும் தயங்க மாட்டார் என்றும் எதிர்பார்க்கலாம்.

Friday, March 24, 2006

பாதுகாப்பு அடி

ம்மாதம் 18ஆம் தேதி, தமிழகத்தின் தொழில் நகரமான ஈரோட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் 'இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை நடத்தியது பற்றி நாளேடுகள் செய்திகளைத் தந்திருந்தன.

காலை உணவாகப் பொங்கல் கொடுக்கப் பட்டது, மதியம் சுக்குக் காப்பி கொடுக்கப் பட்டது, பஜ்ஜி சாப்பிட்டனர், ஏப்பம் விட்டனர் என்பது போன்ற அதி முக்கியமான தகவல்கள் ஒன்று கூட விடப்படாமல் தினமலர் விரிவான செய்திகளைத் தந்திருந்தது. தினமலர் கோபால், விஷ்வ ஹிந்து பரிஷத்தில் முக்கியப் பொறுப்பாளி என்பதால் தினமலரின் இச்சேவை வி.எச்.பிக்குத் தேவை. எனவே நாம் 'அதி முக்கியமான தகவல்களை'ப் பெரிதாகக் கண்டு கொள்ளத் தேவையில்லை.

சிவன் மட்டுமே கடவுள்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று வணங்கும் 'சைவ' மதமும் விஷ்னு மட்டுமே உயர்ந்த கடவுள்; மற்றது எதுவுமே கடவுள் இல்லை என்று கூறும் 'வைணவ'மும் சக்திதான் பெரிது; சக்தி இல்லையேல் சிவமே இல்லை; அவளே ஆதி என்று சக்தியை வணங்கும் 'சாக்த'மும், குமரனே (குமாரன் அல்லன்) கடவுள் எனப் பேசும் 'கெளமார'மும் கணபதிதான் ஆதி; அவனே மூலம் என்று அவனை வணங்கும் 'காணாபத்ய'மும் சூரியன் தான் கடவுள்; ஒளி இன்றேல் உலகமே இல்லை என்று சூரியனை வணங்கும் 'செளர'மும் 'ஷண்மதங்'களாக -ஆறுமதங்களாக- இத்தேசத்தில் இருந்தன.

அவற்றுக்கிடையே போட்டிகளும் யார் பெரியவர் என்ற வாதங்களும் நிறைய நடந்திருந்தன. கேரளத்தில், காலடியில் பிறந்த ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களையும் இணைத்து, 'இந்துமதம்' என்ற ஒன்றாக்கி, அதன் சேவைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் நான்கு மூலைகளில் நான்கு சங்கர மடங்களையும் நிறுவினார். வடக்கே காசி தெற்கே ஷ்ருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா என அவை நிலைகொண்டுள்ளன.

ஆதி சங்கரர் நிறுவிய மடங்களின் சேவையினால் 'இந்து மதம்' என்று பிற்காலத்தில் அறியப் பட்டுப் பின்பற்றப்படும் மதத்தில் ஆறு கடவுள்கள் போக அய்யப்பனும் ஏழாவது கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளான். அதனால் இந்து மதத்துக்கோ இந்து சமுதாயத்துக்கோ எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை. மேலும் இந்தியாவின் நிரந்தரப் பிரச்சனைப் பெயரான 'பாபர்' பெயரில் கூட (வாவர்சாமி) ஒரு சிறு தெய்வம் சபரிமலையில் குடிகொண்டுள்ளது. இதனாலும் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை. மாறாக சினிமா ஸூப்பர் ஸ்டார்களின் படையெடுப்பால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்கின்றது.

குன்றுதோறாடுவது குமரக் கடவுள் மட்டுமல்லன்; திருப்பதி மலை வாழும் வெங்கடேசனும் அய்யப்பனும் மலைக் கடவுள்களாகிவிட்டனர். அவ்வப்போது எழும்,'யார் பெரியவர்' என்ற சிறிய பிரச்சனைக்கு, "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில் மண்ணு" என்று தற்காலிகத் தீர்வு காணப்படும்.

ஏழு கடவுள்கள் போக ரஜ்னீஷ், சாய் பாபா, சிவசங்கர் பாபா, யாகவா முனிவர், பங்காரு அடிகள், மாதா அம்ருதானந்த மயி எனப் பல கடவுள்கள் தோன்றியும் இந்து மதத்துக்கு ஆபத்து நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை.

பின் யாரிடமிருந்து இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வி.இ.ப.வினர் மாநாடு கூட்டுகிறார்கள்?
மதமாற்றத்தைத் தடுத்து மதத்தைப் பாதுகாக்கப் போகிறார்களாம்.

இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.

பாலுக்கும் ரொட்டிக்கும் கோதுமைக்கும் பணத்துக்கும் மதம் மாறுகிறர்கள் என்று கூறுவது இந்துக்களை அவமதிப்பது போலாகும். ஏன் மதம் மாறுகின்றனர் என்று உண்மையான அக்கறையுடன் சிந்தித்தால் மட்டுமே உரிய விடை கிடைக்கும்.

ஒரு விபத்தில் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ வழி தெரியாது நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற 26 வயதுடைய மகேஸ்வரிக்குப் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் வேலை தரப்பட்டது.


இம்மாதம் [மார்ச் 2006] இரண்டாம் தேதி பணியில் சேர்ந்து சமைத்து வைத்தாள் மகேஸ்வரி. ஆனால் அப்பள்ளியின் 83 மாணவர்கள் உணவுண்ண வரவில்லை. மூன்று நாட்கள் அவள் சமைத்தது, உண்ணப் படாமல் கொட்டப்பட்டதுதான் மிச்சம். பெற்றோர்கள் மாணவர்களை உண்ண அனுமதிக்கவில்லை.

காரணம்:- மகேஸ்வரி ஒரு, 'தலித்' என்பதுதான்.

இவ்வாண்டு கோலாகலத்துடன் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. வீர மராட்டியர் வாழும் மாநிலத்தில் R.S.Sஇன் தலைமைச் செயலகம் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தின் நாஸிக் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மைதானத்தில், மராட்டிய அரசு உத்தரவுப்படி தேசீயக் கொடி ஏற்றச் சென்ற சுனிதா பாபு ராவ் கோடெராவ் என்ற பெண் பஞ்சாயத்து ஊழியை , பள்ளி முதல்வராலும் மற்றவர்களாலும் தடுத்து நிறுத்தப் பட்டாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவளைக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.

காரணம்:-
சுனிதா ஒரு,'தலித்'.

திண்ணியத்தில் மலம் திண்ண வைக்கப் பட்டான்.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

பாப்பாப் பட்டியிலும் கீரிப்பட்டியிலும் நாட்டார் மங்கலத்திலும் அவனுக்கு ஜனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமை மறுக்கப் படுகிறது.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அவன் கொடுமையாகக் கொல்லப் படுகிறான்.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.

இன்றும் பற்பல ஊர்களில் அவனால் கடைக்குள் உட்கார்ந்து தேநீர் குடிக்க முடியவில்லை. வெளியில் நின்று குடிப்பதற்கும் தனிக் குவளை.

"நீங்களெல்லாம் சுத்தமில்லாதவா; உங்கத் தெருவுக்கெல்லாம் ஸ்வாமி வராது" என்று சங்கரச்சாரி சொல்வார்.

சரி, சாமி இருக்கிற தெருவுக்கு வந்து தேரை இழுப்போம் என்று போனால் அதற்கும் தடை.

காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.


இவர்களெல்லாம் சமுதாயத்தில் மானம், மரியாதையுடன் வாழ, மற்றவர்களைப்போல் மனிதனாக மதிக்கப்பட அடங்காத் தாகம் கொண்டு தேடிப் போகும் ஆறுதான் 'மதமாறு' என்பது.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.

இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.

எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்.